அன்பார்ந்த மாணவச்செல்வங்களே!!
வணக்கம்,
எனது பெயர் பரிமளா.G தமிழாசிரியை 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுடன் எனது கருத்துகளை நான் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
ஆண்டுப் பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருக்கிறது. எல்லோரும் உங்களுக்குக் கூறும் அறிவுரை படி! படி! படிப்பு தான் உன் வாழ்கை நன்றாகப் படி என்பது தான்.
‘படி’ என்ற சொல்லைக் கேட்டாலே ரொம்ப மனஅழுத்தமாக (டென்ஷன்) இருக்கிறது என்று நினைகிறீர்கள் அல்லவா?
“நாம் அனைவரும் ஒரே மாதிரி திறமை இல்லாமல் இருக்கலாம்”. ஆனால், “அனைவருக்கும் திறமையை வளர்த்துக்கொள்ள ஒரே மாதிரி வாய்புகள் உள்ளன”
என்றார் A.P.J. அப்துல் கலாம் ஐயா அவர்கள்.
இது உங்களுக்கான நேரம் உங்கள் வாழ்கை உங்கள் கையில்,காலம் யாருக்காகவும் காத்திருக்காது. கல்வியை உரிய நேரத்தில் நல்ல பயிற்சியால் மட்டுமே பெற முடியும்.
இனி இருப்பது இரண்டே மாதம் தான். இருக்கின்ற காலத்தை திட்டமிட்டு பாடவாரியாக அட்டவணைபடுத்தி படித்தால் நிச்சயம் உங்கள் இலக்கை அடையலாம்.
கலாஞ்சென்ற பிரதமர் பண்டித் ஜவ்ஹர்லால் நேரு காலத்தின் அருமையை உணர்ந்தவர். அதனால்தான் குறித்த நேரத்தில் வலிமையான இந்தியக் குடியரசை அவரால் உருவாக்க முடிந்தது.
எனவே,“நோக்கம்” எது என்பதை முதலில் தீர்மானி. அதுவே உன் “இலக்கு” என்பதை உறுதி செய்துகொள்.
இலக்கை அடைய உங்கள் உடல்நலம், மனநலம், குடும்பச்சூழல், சகநண்பர்கள் இவையெல்லாம் சில நேரங்களில் உங்கள் முன்னேற்றத்திற்கு தடைகற்களாக உங்களைத் தாக்கும்.
சூழ்நிலை காரணமாக நம் படிப்பிற்கு இடையுறு வந்தாலும் விடாமுயற்சியால் தடையை வென்று சாதனை படைக்கலாம். ஆகவே, “முயற்சியுடையார் இகழ்ச்சி அடையார்”. “முயற்சி திருவினை ஆக்கும்” என்பதை அவ்வபோது நினைவு கூறுங்கள்.
“என்னால் முடியும்” என்று நீ உன் மீது நம்பிக்கை வை. அந்த நம்பிக்கை உன் இலக்கை அடையும் வலிமையைத் தரும். நம்பிக்கை தான் வாழ்வை வளமாக்கும்.
இந்த உலகம் உன்னுடையது. உன் எண்ணத்தில் தான் உருவாகிறது. உன் எதிர்காலம் இந்த உலகம் உனக்கு சாதகமானது என்பதை உணர வேண்டும்.
⦁ எனக்கு பயமாக இருக்கிறது.
⦁ என்னால் முடியாது.
⦁ எனக்கு படிப்பது மறந்து போகிறது போன்ற எதிர்மறையான எண்ணங்களை நீக்குங்கள் காலத்தை வரையறை செய்யுங்கள்.
கற்றலை மேம்படுத்த சில வழிகள் :
i. முதலில் கல்வியை நீங்கள் நேசிக்க வேண்டும். ஆர்வத்துடனும், அக்கறையுடனும் படிக்க வேண்டும்.
ii. படிக்க உட்காரும் முன் நீ படிக்கும் பாடம் குறித்து சில நிமிடம் யோசியுங்கள்.
iii. படிக்கும் போது ஏற்கனவே படித்தவற்றோடு தொடர்பு படுத்தியும் காட்சிபடுத்தியும் படிப்பது சிறந்தது.
iv. படிப்பதை புரிந்து கொண்டு படிக்க வேண்டும். நெட்டுரு செய்வது நீண்ட காலம் நினைவில் இருக்காது
v. படித்ததை தன் சகநன்பர்களுடன் பகிர்தல் நினைவை மேம்படுத்தும்
vi. நேர்மறையான கருத்துக்களை உங்கள் புத்தகத்தில் எழுதி வையுங்கள்,
vii. படிப்பில் உணவு, உறக்கம்,ஆகிய இரண்டும் முக்கிய பங்காற்றுகிறது.உடல்நலத்திற்குக் கேடு விளைவிக்கும் உணவைத் தவிர்க்க வேண்டும்.
viii. உங்கள் நட்பு வட்டாரத்தை சுருக்கிக் கொள்ளுங்கள்.
ix. கைபேசியை அதிகம் பயன்படுத்தாதீர்கள், தொலைக்காட்சி பார்ப்பதைத் தவிருங்கள். இவை இரண்டும் உங்கள் சிந்தனையைச் சீரழிக்கும்.
“காலம் பொன் போன்றது
கடமை கண் போன்றது”
என்றார் பேரறிஞ்ர் அண்ணா.
கடமையை ஆற்ற சரியான தருணம் இது.
⦁ பெற்றோர், ஆசிரியர்களது அறிவுரைகளை மனதில் கொள்ளுங்கள்.
⦁ படிக்கும் முறை, தேர்வு எழுதும் முறை, கையெழுத்துத் தெளிவு, வினாக்களைத் தேர்வு செய்யும்முறை அதிக கவனம் செலுத்த வேண்டிய பகுதிகள் பற்றி ஆசிரியர்கள் சொன்ன கருத்துகளை நினைவில் கொண்டு தேர்வுக்கு உங்களை தயார் செய்யுங்கள்.
“நீரளவே ஆகுமாம் நீராம்பால் தான் கற்ற
நூல் ஆளவே ஆகுமாம் நுண்ணறிவு”
என்பதை உண்ணர்ந்து மூளையைக் கூர்மையாக்குங்கள்.
⦁ கல்வியை முயற்சியால் தகுந்த பயர்சியால் கற்று நல்ல மதிப்பெண் பெற்று வாழ்வில் மேன்மையடைய வழ்த்துகிறேன்.
G.பரிமளா, M.A., B.Ed., M.phil.,
ஸ்ரீ சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி
கடலூர் துறைமுகம்